2014ல் நடந்த உலக ஹிந்து மாநாட்டின் தொடங்க விழாவில் வெளியிடப்பட்ட Prabodhan- Thoughts on Hindu Society என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொடரில் முதல் பதிவு இது. இப்புத்தகம் சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் வெவ்வேறு காலகட்டங்களில் தோன்றிய மிகச்சிறந்த சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் நமது சமூகம், கலாச்சாரம், சனாதன தர்மம், பொதுவாக நமது நிகழ் மற்றும் எதிர்காலத்தை பாதிக்கக்கூடிய விஷயங்களை ஆழ்ந்து ஆய்வு செய்து எழுதிய கட்டுரைகளை உள்ளடக்கியது. சிவாஜி ஜெயந்தியை முன்னிட்டு இந்த முதல் பதிவில் சத்ரபதி சிவாஜி மஹாராஜா அவரது இளைய சகோதரர் ஏகோஜிக்கு எழுதிய கடித்தத்தின் மொழிபெயர்ப்பு பதிவிடப்படுகிறது.
“பல நாட்களாக உன்னிடமிருந்து எவ்வித தகவலும் இல்லாமலிருப்பது எமது மனதை விசனப்படச் செய்கிறது. நீ துக்கத்துடனும் மனம் தளர்ந்தும் இருப்பதாக ரகுநாந்பன்ட் அவர்கள் விரிவாக எழுதியிருந்தார். நீ உனது உடல் நலத்தில் அக்கறை செலுத்துவதில்லை என்றும், பண்டிகைகளைக் கொண்டாடுவதில்லை எனவும், சடங்குகளைச் செய்வதையும் நிறுத்தி விட்டதாகவும் மேலும், படையெடுக்கும் மனநிலையில் நீ இல்லாததால் உனது பெரிய படை வேலையின்றி வீணாக இருப்பதாகவும் துறவறம் மேற்கொள்ளும் எண்ணத்துடன் புனித க்ஷேத்திரங்களில் உன் எஞ்சிய காலத்தைக் கழிப்பது குறித்து பேசுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
நமது காலஞ்சென்ற தகப்பனார் இடுக்கண்களைக் கடந்து இடைவிடாது எவ்வாறு போராடினார், இஸ்லாமியர்களின் கீழ் பணிபுரிந்த போதும் தமது திறமை, தகுதி மற்றும் முயற்சியின் மூலம் பல காரியங்களைச் சாதித்து பேரும் புகழும் அடைந்தார் என்று நீ அறிந்திருக்கிறாய்… ஸ்வராஜ்யத்தை நிறுவ ஒவ்வொரு சோதனையையும் நாம் கையாண்ட விதம் உனக்குத் தெரியும் என்பது மட்டுமல்லாது இன்றும் நீ அதை உன் கண்ணால் கண்டு கொண்டிருக்கிறாய். எனவே உனது வாழ்வின் நோக்கம் நிறைவுற்று விட்டதாக இத்தகைய இளம் வயதில் கருதுமாறும், உனக்கு சற்றும் பொருத்தமற்ற தன்மையைப் பற்றிய எண்ணங்களை விதைத்து உனது பாதையிலிருந்து விலகச் செய்யுமாறும் உனது ஆட்கள் வேலையேதும் செய்யாது ஊதியம் பெறுமாறும் அக்கறையின்றி செயல்படுமளவுக்கு உன்னை பாதித்தது எத்தகைய சூழ்நிலை என புரிந்து கொள்ள எம்மால் இயலவில்லை. இது எம்மாதிரியான ஞானம் அல்லது கொள்கை? உன்னை எப்பொழுதும் கவனித்துக்கொள்ள உன்னுடனே ஒரு பெரியவர் இருக்கும்பொழுது உன்னை எது வருத்த இயலும்? எனவே உளச்சோர்வையும் சந்நியாசம் குறித்தான எண்ணங்களையும் உன் மனதிலிருந்து அறவே நீக்கிவிட்டு உன் வாழ்க்கையை வாழு. அனைத்து பண்டிகைகளிலும், மதச் சடங்குகளிலும் முன்பைப் போல் பங்கெடுத்துக் கொள். உன் வீரர்களை படையெடுப்புகளுக்கு அனுப்பி செல்வமும் புகழும் ஈட்டுமாறு நல்ல விதமாக உபயோகப்படுத்து. நீ உன்னுடைய சிறந்த திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் செல்வமும் மகிழ்ச்சியும் அடைவது நமது இளைய சகோதரன் பல சாதனைகள் புரிந்தான் என்ற மனதிருப்தியையும் மிகுந்த பெருமையையுமே எமக்குத் தரும்.
அங்கிருக்கும் ரகுநாத்பன்ட் ஒன்றும் அந்நியர் அல்லர். அவர் நமது மனிதர். எம்மீது கொண்ட மரியாதையை உன் மீதும் வைத்துள்ளார். அவர் திறமைசாலி மட்டுமல்லாமல் நீ எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று நன்றாகத் தெரிந்தவர். யாம் அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளோம். நீயும் அவ்வாறே செய்வதோடல்லாமல் பரஸ்பர புரிதல் மற்றும் ஒத்துழைப்பின் மூலம் நிர்வாக விஷயங்களில் அவரது அபாரமான திறமைகளைப் பயன்படுத்தி புகழும் செல்வமும் அடைய வேண்டும்.
எந்த வேலையும் செய்யாமலிருப்பதற்கு உன் வீரர்களுக்கு ஊதியம் கொடுத்து நேரத்தை விரயமாக்காதே. இது செயல்பட வேண்டிய தருணம்; உன் வயதான காலத்தில் சந்நியாசம் பெறுவதற்கு போதுமான அளவு நேரம் இருக்கிறது. யாமும் உனது திறமைகளையும் சாதனைகளையும் கண்டு களிக்க விழைகிறோம். இதற்கு மேல் எழுத என்ன இருக்கிறது? நீ விவேகமானவன்.”
_ _ _ _ _ _ _ _
சத்ரபதி சிவாஜி மஹாராஜா (1630-1680) மராத்திய சாம்ராஜ்யத்தைத் தோற்றுவித்தவர். பாரதத்தை ஆண்ட இஸ்லாமியர்களின் மீதான எதிர்ப்பின் சின்னமாக அவர் திகழ்கிறார். பல நூற்றாண்டுகளாக ஹிந்துக்கள் இஸ்லாமிய அரசர்களை எதிர்த்துப் போரிட்டு வந்தாலும் சிவாஜி மஹாராஜா அவரது தொலைநோக்குப் பார்வையுடனான தலைமை, இராணுவ வெற்றிகள், நல்ல ஆட்சிமுறை மற்றும் உறுதித்தன்மையகன் வாயிலாக முகலாயப் பேரரசிற்கு மரண அடியைக் கொடுத்து அதன் வீழ்ச்சியை துரிதப்படுத்தினார்.
(Source: https://hindupost.in/history/shivajis-letter-ekoji/)
Did you like this article? We’re a non-profit. Make a donation and help pay for our journalism.